புதன், 8 மார்ச், 2017

வாப்ஸ் வகுப்பு_பிரிவு உபச்சார விழா

ஒன்றாய் கூடி
ஓராண்டை கடந்துவிட்டோம்.

வகுப்பு தோழர்கள் நாம்.
ஒத்த வயதில்லை நமக்குள்.
ஒற்றையாய் ஒரு மாணவன்.
செல்லப்பிள்ளையாய் ஒரு சகோதிரி.
சில மாணவ தாத்தாக்கள்.
இருப்பினும்
நம்மில் மாணவ அப்பாக்களே அதிகம்.
ஒத்த வயதில்லை நமக்குள்.
இருப்பினும் வகுப்பு தோழர்கள் நாம்.

நம் நாயகர்
நம் விழா நாயகர்
திரு.சம்பத் சார் அவர்களை
"வேளாண் அதிகாரி "
"ஒய்வு பெற்றவர் "
"நெறி படுத்துபவர்"
நமக்கெல்லாம் இப்படித்தான்

அறிமுகப்படுத்தினார்கள்.

வாரங்கள் நகர நகர
வகுப்புகள் நகர நகர
அவர் மீதான மதிப்பும்
உயர்ந்து கொண்டே சென்றது.

ஓய்வு காலத்தை
பயனுற பரிமாற
தேர்ந்தெடுத்த இந்த களம்
அசாத்திய துணிவானது.

வகுப்புகளை தாண்டி
அதிக பொறுப்புகளை சுமக்கும்
மாணவர்கள் நாம்.
வெவ்வேறு நேரங்களில்
வெவ்வேறு மனநிலை கொண்ட
மாணவர்கள் நாம்.

எல்லாவற்றையும்
சரியாக கையாண்டு
வழிநடத்திய தைரியம்
ஆச்சரியமளிப்பவை.

நமக்கான வகுப்பு ஆசிரியரை
தேர்வு செய்கையில்
இந்த வகுப்பு,
இவரால்
இவரால் மட்டுமே சிறப்புறும்
என ஆய்ந்து,
வகுப்பறையில் நாம் நுழையுமுன்
அவரை அமர வைத்திருக்கும்
முன்திட்டமிடல்.
நம்மீதான
ஆர்வத்தின் வெளிப்பாடு இது.

சம்பத் சாரிடம்
அதட்டல் இல்லை.
ஆனால் கண்டிப்பு இருக்கும்.
அதிகாரம் இல்லை.
வேண்டுகோள் இருக்கும்.
இது போன்று
இருக்கும் இல்லைகள்
இவரிடம் அதிகம்.
எல்லாம் நமக்காக.

வகுப்பறையில்
ஆசிரியரின் விளக்கங்கள்
நம் மூளையை விட்டு சற்று
எட்டி இருந்தாலோ ,
சரியாய் விளக்கம் சொல்ல
ஆசிரியர் திணறிலாலோ
இடையில் குறுக்கிட்டு
நமக்கு புரிய செய்யும் பாங்கு.

நான் சற்று
அதிகமாகவே கவனித்திருக்கிறேன்
நம்மைவிட வகுப்பை அவரே
அதிகம் கவனிக்கிறார் என்று.

இத்தருணத்தில்
ஒன்றை பதிவு செய்ய
விரும்புகிறேன் நண்பர்களே.

உரக்கடை போக
எஞ்சிய நேரங்களில்
எனக்கு விவசாயமே தொழில்.
முழுக்கால் சட்டை அணிவது
எனக்கு வாய்க்கவில்லை.
வாய்ப்பில்லை.

புதுப்பை தூக்கி
முழுக்கால் சட்டை அணிந்து
விவசாயத்தில் புதிய நுட்பங்கள்,
செய்ய கூடியது கூடாதது
என் ஆர்வமாய் முதல் வகுப்பை
முடித்த எனக்கு
"தகுதி நீக்கம் " செய்வதாய்
ஓர் அறிவிப்பு
பேரதிர்ச்சியாய்தான் இருந்தது

காரணம் தேடி
கற்றல் மிகுதியில்
ஆர்வம் மிகுதியில்
தொலைபேசியில்
சம்பத் சாரிடம்
என்னால் கேட்கப்பட்ட கேள்வி
இப்போதும்
உறுத்தல் உண்டு எனக்குள்.
"யாரை உட்கொணர
என்னை வெளியேற்றம்
செய்கீர்கள்" என.

எனது தகுதிநீக்கத்திற்கான
மையப்புள்ளி
சம்பத் சார் அல்ல என்பதை
அடுத்த வகுப்பு  வெளிச்சமாக்கியது.
இருப்பினும்
இப்போதும்
இவ்வேளையில்
கற்றல் ஆர்வத்தில் கேட்கப்பட்ட
அசட்டுத்தனமான கேள்விக்காக
அதிகமாய் வருந்துகிறேன்.

நண்பர்களே
மண்ணுலகில்
பிறந்தவர்க்கு
முதல் மூன்று விஷயங்கள்
மறக்க முடியாதவை.
முதல் முத்தம்
முதல் காதல்
முதல் வகுப்பு ஆசிரியர்.

அதுபோலவே
உனக்குபிடித்த ஆசிரியர்
பெயர் எழுதசொன்னால்
முண்டியடித்து
முன் வரிசையில்
உட்கார்ந்து கொள்கிறது
சம்பத் சாரின் பெயர்.
நினைவில் வைப்போம்
எப்போதும் உங்களை.

விழா நாயகரை
வாழ்த்த யோசிக்கையில்
நான் இந்த படிப்புக்காக
கடந்துவரும் நீண்ட
தொலைவை போலவே
நீண்டுபோனது
சம்பத்சாரை பற்றிய நினைவுகள்.

என் மகளின் வயதையொத்த
ஒருங்கிணைப்பாளர் தாரணி.

அவரை குறித்து
குறைந்தபட்சம் ஒற்றை பாராவுக்குள்
அடக்கிவிட யோசித்ததில்
"ஒருங்கிணைப்பதில்
தகுதி நிரம்பிய
அமைதியானவர்" என்ற
ஒற்றை வாக்கியமே
பொருத்தமானது.
வளர்க வளத்துடன்.

நம்மை புதுப்பித்துக்கொள்ள
நம்மை செழுமையாக்கி கொள்ள
ஓர் கோரிக்கை.
சான்றிதழ் நோக்கித்தான்
இந்த படிப்பு என்றபோதிலும்
கடந்துவந்த சிரமங்கள்
விட்டுகொடுத்த தியாகங்கள் பல.

நினைத்து பாருங்கள்
நண்பர்களே.

முழுதாய் ஓராண்டு
முழுதாய் எல்லா சனிக்கிழமையும்
காலைமுதல் மாலைவரை
வகுப்பிலேயே அமர்த்தப்பட்டோம்.

தவிர்க்க முடியாமைக்கு
முன் அனுமதி பெறவேண்டும்.

எழு, படி, எழுது என
தம் பிள்ளைகளுக்கு கட்டளையிட்டு
பழகிப்போன நாம்

எழுந்தோம் படித்தோம்
எழுதினோம் என
மாறிய சூழ்நிலை.

உண்பதற்காகவே உழைக்கிறோம்.
உழைக்கும் பரபரப்பில்
உண்பதை தள்ளிபோடுகிறோம்.
பல சமயங்களில் தவிர்த்து
விடுகிறோம்.

உர இருப்பையும்
காசோலை தேதியையும்
பராமரிப்பதில் கவனம் செலுத்தும்
நாம்
வீட்டு உறவுகள்
தூரத்து சொந்த உறவுகள்
சுக துக்கங்களை
பராமரிப்பதில் தவறிவிடுகிறோம்.

எல்லாம் சரியாகும்
நம்புங்கள் நண்பர்களே
நம்மால் முடியும்.

சான்றிதழுக்காக
வாரத்தில் ஒருநாளை
துறந்த நம்மால்

குடும்பத்திற்காக
வாரத்தில் உள்ள 168 மணி நேரத்தில்
5 மணி நேரம்
ஒதுக்கீடு செய்யலாமே?

வாப்ஸ் படிப்பு
இந்த மனக்கட்டுபாட்டை
கற்றுகொடுத்துள்ளது.

உறவுகளோடு
உற்சாகமாக வாழ்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக